Wednesday 27 March 2013

பரதே...சியர்ஸ்!







பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்களும் அநேகமாக வெளிவந்து விட்ட நிலையில் (சற்றுத் தாமதமாக) படத்தைப் பார்த்து விட்டு நானும் ஒரு விமர்சனம் எழுத வேண்டியது அவசியம் தானா?!

‘இப்படி ஒவ்வொண்ணைப் பத்தியும் நீ ரொம்ம்ம்ப யோசித்துக் கொண்டிருந்தால் Facebook’ல் எதையும் உன்னால் ‘அப்டேட்’ செய்ய முடியாது!’ என்று நண்பர்கள் கடுப்பாக – இதோ ‘பரதேசி’!...

‘பரதேசி’யை தீவிரமாகத் தாக்குபவர்கள் நிறையவே உண்டு! அவர்களில் சிலர் ‘கதையே இல்லை!’ என்றார்கள், சிலர் ‘கிராமத்து மக்கள் சிரமப்பட்டார்கள் சரி, அதற்காக படம் முழுக்க இதையே காட்டணுமா?’ என்று சிடுசிடுத்தார்கள். இதனாலெல்லாம் ‘பிரெயின்வாஷ்’ ஆகாமல் நான் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்ததே பெரிய விஷயம்தான்!

நண்பர் ஒருவர் ‘கடைசியிலாவது redeeming factor’ என்று எதையாவது காட்டியிருக்கலாம்...’ என்று படபடத்தார். அதாவது, மெல்லிய ஒளிக்கீற்றாகக்கூட நம்பிக்கை தரும் காட்சியோ முடிவோ இல்லையாம்.


இந்த ரீதியான வாதங்கள் எதிலும் ‘லாஜிக்’ இருப்பதாக எனக்குப் படவில்லை. விஷயம் என்னவென்றால் அந்தக் காலத்தில் படங்கள் முடிந்த கையோடு சுபம்...மங்களம் என்று கார்டு போடுவார்கள். அப்படி ‘பரதேசி’யில் போடமுடியாது!

சோகத்தில் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை?! புரியவில்லை. குறைந்தபட்சம் சோகங்களை நேர்கொண்டு பார்க்கும் துணிவு கூட இல்லாமல் இருந்தால் எப்படி? இப்படி இருப்பது ஒரு மோசமான ‘எஸ்கேபிஸம்’ இல்லையா?! சோகம்தான் கனிவை, compassion பிறக்கச் செய்து நம் ஞானக்கண்ணைத் திறக்கிறது! ‘There are tears in things’...என்றார் பண்டைய ரோம் நாட்டில் வாழ்ந்த வர்ஜில் என்கிற மாபெரும் கவிஞர். அதாவது...’இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி, உண்ணுகிற அரிசி, அணிகிற செருப்பு, உறிஞ்சுகிற தேநீர்...இவற்றின் பின்னணியில் உள்ள கண்ணீர் உன் கண்களுக்குத் தெரிகிறதா?’ என்கிறார் கவிஞர்!

சரி ‘பரதேசி’ படத்தில் பல ஆச்சர்யங்கள் இருக்கின்றன, படத்தில் வில்லன் கிடையாது! அதாவது தமிழ் சினிமாவில் வருகிற வில்லன் கிடையாது. வருகிறவர்கள் காலத்தின் கட்டாயத்தால் கெட்டவர்களாக வாழ்பவர்கள். கொடூரங்களை பிரயோகிக்கும் கெட்டவர்களின் முகங்களை சரேலென்று காமிரா காட்டியவாறு நகரும்போது அவர்களிடம் தெரியும் இயலாமையையும், பரிதாபத்தையும் நம்மால் கவனிக்க முடியும். தேயிலைத் தோட்டங்களை பராமரிக்கும் வெள்ளைக்கார எஜமானன் கூட எங்கோ அந்நிய நாட்டில் இருக்கும் எவனுக்கோ கங்காணிதான். பண்டைய எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டுவதற்கான பெரும் கற்களை அடிமைகள் சரியாக தள்ளிக்கொண்டு வந்து அடுக்குகிறார்களா என்று ஃபாரோ மன்னனின் சார்பில் கையில் சவுக்கோடு கண்காணிக்கும் அதிகாரி மாதிரி தான்!

காடு, மலை, பசேலென்று பரந்து விரியும் தேயிலைத் தோட்டங்கள்...இதையெல்லாம் ‘அழகுணர்ச்சியோடு’ சுட்டிக்காட்டாமல் எச்சரிக்கையுடன் காமிரா தவிர்ப்பது கவனிக்கத்தக்கது. காதலர்கள் சந்திக்கும் பிக்னிக் ஸ்பாட் அவை அல்லவே!

Clichéக்களை குறைக்கலாமே தவிர, முழுசாகத் தவிர்க்க முடியாது போலிருக்கிறது!


மரத்துக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் கதாநாயகி, ஹீரோவைப் பார்த்து ஒண்ணரைக்கண்ணோடு ‘அழகு’ காட்டுவது...’கோயிலுக்கு வந்து தாலி கட்டுறியா?’ என்று சைகையிலேயே அவனிடம் கேட்பது, வெள்ளைக்காரன் என்றாலே மதுபாட்டில்கள் சூழ ‘பாரி’ல் அமர்ந்து சுருட்டுப் பிடிப்பது, ‘They really get on my nerves’ என்று சீமாட்டி கோபப்படுவது, நாட்டுப்புறத்தனமே இல்லாமல் ‘செங்காடே’ என்று செதுக்கிய தமிழ் வார்த்தைகளுடன் பாடல், நிறைய இடங்களில் சத்தமான இசை அமைப்பு. (இயற்கைச் சூழ்நிலைகளில் ஏற்கனவே இசை உண்டு, நாம வேறு மெனக்கெட வேண்டாம்!) இறுதியில் பழைய ‘பாசமலர்’ கடைசி காட்சி மாதிரி டாப் ஆங்கிள் படப்பிடிப்பு......சரி, இதெல்லாம் பெரிய தப்புகள் ஒண்ணும் இல்ல, வுட்டுடலாம் நாயன்மாரே!




இறுதியில் தன் பெண்டாட்டியையும் குழந்தையையும் தொலைவில் பார்த்த விநாடியில் பரவச உணர்வு பளீரென கொந்தளிக்கத் துவங்க...மறு விநாடி ‘ஐயோ, அடிப் பாவி! கடைசியில் நீ இங்கு வந்தா தொலைக்க வேண்டும்?’ என்கிற கொடூரமான உண்மை மனதை ஒருசேர தாக்க, அந்த இளைஞன் ஓ’வென்று அலறியவாறு, அவளை நோக்கி ஓடுகிறானே – வசனமே இல்லாத அந்த சில நிமிடங்களில் குபுக்’கென்று இழையோடும் திரைக்கதை எனக்கு போதும்.

இப்படி பரந்து விரிந்த ‘தேயிலைத் தோட்டங்கள்’ இன்றளவும் ஏராளமாக நாடெங்கும் உண்டு. வடிவங்கள் தான் வெவ்வேறு! அவற்றையெல்லாம் சற்றே நின்று கவனிக்க கற்றுக் கொடுக்கும் திரைப்படம் ‘பரதேசி’.

‘என்னங்க நீங்க, அப்ப படம்னா விவரமா ஒரு கதையே தேவையில்லைங்குறீங்களா?!’ என்பீர்கள்.

நான் அப்படிச் சொல்லவில்லை.

உங்களாலும் பாலா மாதிரி ஒரு படத்தை போட்டுக் காட்ட முடியும் என்றால்...

தேவையில்லைதான்!


No comments:

Post a Comment