Monday 29 April 2013

‘டூப்’ பீச்?!


ரண்டு நாட்களுக்கு முன்பு மெரினாவுக்குச் சென்றேன். காந்தி சிலைக்கருகில் நின்று பார்த்தால், பீச்சே (அதாவது மணல் பரப்பு) கண்ணுக்கு தெரியவில்லை. அவ்வளவு கடைகள்! மூவாயிரத்துக்கும் அதிகம் என்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பீச்சுக்குள் நாம் வளைந்து வளைந்து நடந்து செல்ல கடைக்காரர்களே ஒற்றையடிப் பாதை ஒன்றை ஏற்படுத்தித்தந்தால் பெரிய விஷயம்! அப்படியென்றால், மக்கள் காற்றாட எந்த இடத்திலும் உட்காரவே முடியாதா? ‘தகவல்’ தங்கவேலு என்கிற என் நண்பர் (நிருபர்!) என்னிடம் சொன்னார் – “கவலைப்படாதீர்கள். இந்த பிரச்சனையை தீர்க்க, செங்கல்பட்டுக்கருகே 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இன்னொரு மெரினா பீச்சை அரசு உருவாக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. இதே போல ஒரு காந்தி சிலையை கூட வைக்கபோகிறார்கள். அங்கே மக்களுக்காக மட்டுமே மணல் ஒதுக்கப்படும். பீச்சுக்கு செல்கிறவர்கள் முதலில் நம்.1 பீச்சுக்கு சென்று பட்டாணி சுண்டல், மாங்காய், மிளகாய் பஜ்ஜி’யெல்லாம் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து, ஸ்பெஷலாக போகும் பறக்கும் ரெயில் வண்டிகளில் ஏறி, செங்கல்பட்டு பீச்சுக்குப் போக வசதி செய்து தரப்படும். ஆகவே, மக்கள் கவலைப் பட வேண்டாம்!”

Friday 26 April 2013

அடேங்கம்பானி!

அம்பானி வீடு (மொத்தமும்!)

முதன் முறையாக நம் நாட்டில் ஒரு மகா கோடீஸ்வரருக்கு உச்சக்கட்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு தர மத்திய உள்துறை இலாகா ஏற்பாடு செய்திருக்கிறது! விரைவில் இது பெருமையான - status symbolஆக கருதப்பட்டு, மகா கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதே பாதுகாப்பை எதிர்பார்க்கலாம்! ஆக மொத்தத்தில் இந்திய ஏழை நாட்டுக்குள் ‘பணக்காரர்கள் நாடு’ என்கிற ஒன்று தனியாக உருவாகியிருப்பது புரிகிறது. இதையடுத்து அம்பானிகளுக்கு என்று தனி கொடி, தூதுவர், மற்றும் ஐ.நா’வில் கெளரவ அங்கத்தினர் பதவி...இதெல்லாம்தான் பாக்கி! ஸோ, விரைவில் பெரும் செல்வந்தர்கள், நம் நாட்டுத் தெருக்களில் அரசியல் தலைவர்களைப் போல ஜீப்புகள், பைலட் மோட்டார்சைக்கிள்கள் சூழ AK-47 ஏந்திய இருபதுக்கும் மேற்பட்ட கமாண்டோக்களுடன்தான் எங்கும் போவார்கள். ஜீப்புகளில் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகள் மட்டுமே இப்போதைக்கு இருக்காதென்று தெரிகிறது. ஆனால் இதெல்லாம் இலவசமாக தரப்படப்போவதில்லை. அம்பானி அதற்காக மாசம் 15 லட்சம் ரூபாய் அரசுக்கு தர வேண்டுமாம். அம்பானியின் மதிப்பு (!) இரண்டு லட்சம் கோடி ரூபாய். இந்த கணக்குபடி பார்த்தால், எனக்கும் ‘Z’ பாதுகாப்பு தரப்பட்டால் அதற்காக மாதந்தோறும் நான் எவ்வளவு அரசுக்கு தரவேண்டியிருக்கும்? 15 பைசா?!